கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான ஊழல் வழக்கில் விசாரணையைத் தொடங்குவதில் இனி தாமதம் இருக்காது என்று கூட்டரசு நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். 1எம்டிபி நிதி சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் திரு நஜிப் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரம் திங்கட்கிழமை தொடங்கும் என்று தலைமை நீதிபதி துங்கு மாய்முன் துன் மாட் கூறியுள்ளார். 1எம்டிபி வழக்கு விசாரணையைத் தள்ளிவைக்க அனுமதிக்க வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி நஜிப்பின் வழக்கறிஞர்களும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்களும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த முடிவை கூட்டரசு நீதிமன்றம் உறுதிப்படுத்தியதை அடுத்து நஜிப் மீதான ஊழல் வழக்கு விசாரணை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

