கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகிர் நாயக், சென்ற வாரம் கிளந்தானில் உரையாற்றியபோது கூறிய கருத்துகளுக்கு மலேசியாவில் எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில் ஸாகிர் மீது 115 போலிஸ் புகார்கள் வந்திருப்பதாக மலேசியப் போலிசார் கூறியுள்ளனர்.
ஸாகிர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூட்டரசு காவல் துறை இயக்குநர் ஹுசிர் முகம்மது தெரிவித்தார்.
மலேசியாவில் நிரந்தர குடியுரிமை அந்தஸ்து பெற்றுள்ள ஸாகிர் சென்ற வாரம், கிளந்தானில் பேசியபோது மலேசியாவில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கே விசுவாசமாக உள்ளனர் என்றும் தம்மை நாட்டைவிட்டு அனுப்புவதற்கு முன்பு விருந்தினர்களாக வந்திருக்கும் சீனர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனவும் கூறினார். அவர் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரின் கருத்துகளால் நாட்டில் இதுவரை கட்டிக்காக்கப்படும் அமைதியும் , நிலைத்தன்மையும் சீர்குலைந்து விடும் என்ற அச்சம் மலேசிய மக்களிடத்தில் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஸாகிரை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான், அமைச்சர்கள் கோபிந் சிங் டியோ மற்றும் எம் குலசேகரன் உட்பட பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
பல இன மக்கள் வாழ்வதே மலேசியாவுக்கு பலமாகும். எங்களின் விசுவாசத்தையும் ஒற்றுமை உணர்வையும் ஸாகிர் கேள்வி எழுப்பக்கூடாது என்று சைட் சாடிக் அறிவுறுத்தினார்.
ஸாகிரை மலேசியாவைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ராய்ஸ் யாத்திமும் கேட்டுக்கொண்டுள்ளார். ஜனநாயக செயல் கட்சி மற்றும் பிகேஆர் கட்சி அமைச்சர்களும் இது தொடர்பாக அமைச்சரவையில் பேசி கூடிய விரைவில் முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதற்காக ஸாகிரை நாட்டைவிட்டு வெளியேற்ற மலேசிய அமைச்சரவை இணங்கியிருப்பதாக பத்திரிகைத் தகவல்கள் கூறுகின்றன. ஸாகிர் அவராகவே வெளியேற அவருக்கு மலேசியா நெருக்குதல் கொடுக்கும் என்று அரசாங்கத் தகவல் கூறியது.