ஆஸ்திரேலிய சுற்றுப்பயணியும் அவரது துணையும் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த வேன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்தச் சுற்றுப்பயணி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தாக்கியவர்களை நியூசிலாந்து போலிசார் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) வலைவீசி தேடிக் கொண்டிருந்தனர்.
ஆஸ்திரேலிய தம்பதியர் ரக்லான் கரையோர நகருக்கு அருகிலுள்ள கண்கவர் இடத்தில் வேனை நிறுத்தி வைத்திருந்ததாகவும், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மேலாக ஒரு சந்தேக நபர் வேனை அனுகியதாகவும் போலிசார் தெரிவித்தனர்.
அந்தச் சந்தேக நபர் வேனுக்குள் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணியைக் காயப்படுத்தியதாகப் புலனாய்வு அதிகாரி கிரஹம் பிட்கெத்லி செய்தியாளர்களிடம் கூறினார். இந்தத் தாக்குதலின்போது, வேனுக்குள் இருந்த பெண் தப்பி ஓடிச்சென்று, போலிசாருக்குத் தகவல் கொடுத்தார்.
காயமடைந்த சுற்றுப்பயணி வேனுக்குள் இருக்கையில், சந்தேக நபர் வேனைத் திருடி ஓட்டிச்சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
பிற்பாடு, சுமார் 75 கிலோமீட்டர் தொலைவிலிருந்த கோர்டன்டன் கிராமத்தில் காலை எட்டு மணிக்கு வேன் கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணி உள்ளே இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் சுடப்பட்டதால் அவர் இறந்தாரா அல்லது மேற்கொண்டு தாக்கப்பட்டு இறந்தாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை.