ஹாங்காங்: அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் தொடர்ந்து போராடுவதற்குத் தேவையான வளங்களும் மனத்திடமும் தங்களிடம் இருப்பதாக ஹாங்காங் போலிஸ் கூறியுள்ளது.
ஆர்ப்பாட்டங்கள் மேலும் அதிகரித்தால் அதையும் தங்களால் கையாள முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதனால், ஹாங்காங் பிரச்சினையில் சீனா தலையிட வேண்டியிருக்கும் என்று எழுந்த கூற்றுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எல்லையில் சீனா தன் படைகளை அதிகப்படுத்துவது தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மூன்று மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவ்வாறு ஏதேனும் நடக்கும் பட்சத்தில் அது ஹாங்காங் போலிசைத் தர்மசங்கட நிலைக்குத் தள்ளும் என்றும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
ஆர்ப்பாட்டங்களை ஹாங்காங் போலிசால் கையாள முடியும் என்பதால், இந்தப் பிரச்சினை முக்கியமாகிறது என்று அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
“என்னால் அதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது,” என்றார் ஒரு அதிகாரி.
“செயல்பாட்டு நிலையில், எங்களுக்குப் பெருமளவு அனுபவம் உள்ளது.
“தொடர்ந்து செல்வதற்கான உறுதியும் ஒத்திசைவும் தேவையான வளங்களும் எங்களிடம் உள்ளது,” எனத் தான் நினைப்பதாகச் சொன்னார் இன்னோர் அதிகாரி.
சில வகை குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை சீனாவிடம் ஒப்படைக்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த ஜூன் மாதம் முதல் ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
ஆர்ப்பாட்டங்களால் மசோதா தற்காலிகமாகக் கைவிடப்பட்டது என்றாலும் அதை முற்றிலும் நீக்கக் கோரி தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.