மலேசியாவின் ஈப்போ நகரில் உள்ள ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் நேற்று அதிகாலை சாமி சிலைகள் உடைக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக இந்தோனீசிய ஆடவர் ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
கம்போங் டுசுன் பெர்த்தான் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தின் பிரகாரத்தில் நவக்கிரகங்களின் சிலை உள்ளிட்ட 15 சிலைகள் உடைக்கப்பட்டதாக அதிகாலை 1.50 மணிக்கு ஆலய நிர்வாகம் சார்பில் போலிசில் புகார் செய்யப்பட்டது. உடனடியாக விசாரணையில் இறங்கிய போலிசாருக்கு பொதுமக்கள் உதவினர். அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் விடியற்காலை 4.15 மணியளவில் 25 வயது மதிக்கத்தக்க இந்தோனீசிய ஆடவர் பிடிபட்டார்.
ஆலயத்திற்கு அருகில் அவர் கைது செய்யப்பட்டதை பேராக் மாநில போலிஸ் படை துணைத் தலைவர் லிம் ஹாங் ஷுவான் உறுதிப்படுத்தினார். பிடிபட்டபோது அந்த ஆடவர் போதைப்பொருள் உட்கொண்டு இருந்தது சோதனையில் தெரியவந்ததாக அவர் கூறினார்.
மேலும், அந்த ஆடவர் தமது முதலாளியிடம் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு ஓடியதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சந்தேக நபரிட
மிருந்து சிலைகளை உடைக்கப் பயன்படுத்தியதாக நம்பப்படும் ‘ஸ்பேனர்’ கைப்பற்றப்பட்டது.
இந்தச் சம்பவத்தை தங்கள் இஷ்டம்போல ஊகித்து சமயப் பதற்றத்தை ஏற்படுத்திவிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, சாமி சிலைகள் உடைக்கப்பட்டதால் ஆலயத்திற்கு சுமார் 80,000 ரிங்கிட் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத் தலைவர் தனபாலன் கூறியுள்ளார்.
பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன், பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ.சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் நேற்றுக் காலை சம்பவ ஆலயத்திற்கு விரைந்து சென்று சேதங்களைப் பார்வையிட்டனர்.