பெய்ஜிங்: தைவானுக்கு எட்டு பில்லியன் பெறுமானமுள்ள எஃப்16 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஒரே சீனா கொள்கைக்கு எதிராக இந்தத் திட்டம் இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சு அதிருப்தி தெரிவித்துள்ளது. தைவானுக்கு போர் விமானம் விற்பது மூலம் தனது இறையாண்மைக்கு அமெரிக்கா பாதிப்பு விளைவிப்பதாக சீனா கூறுகிறது. தைவானை தனது ஒரு பகுதியாக சீனா கருதுகிறது.
தைவானுக்கு ஆயுதங்கள் விற்பதையும் தைவானின் ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துக்கொள்வதையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியது. இல்லாவிடில், எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது திண்ணம் என்று சீனா எச்சரிக்கை விடுத்தது.
தைவான் அருகே சீன ராணுவம் அதிகம் குவிக்கப்படுவதால்தைவானுக்கு ஏற்படும் நெருக்குதல் அதிகரித்திருப்பதாகவும் எனவே போர் விமான விற்பனையை விரைவுப்படுத்தவும் அமெரிக்காவின் ஜனநாயக, குடியரசுக் கட்சி களைச் சேர்ந்த முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தைவானுக்குப் போர் விமானங்களை விற்பனை செய்வதை அமெரிக்காவின் செனட் வெளியுறவு குழுத் தலைவரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான ஜிம் ரிஷ்க் வரவேற்றார்.
“தைவான் அதன் இறையாண்மையைப் பாதுகாத்துக் கொள்ள இந்தப் போர் விமானங்கள் பேருதவியாக, அவசியமானதாக இருக்கும்.
“சீனாவின் நெருக்குதலுக்குத் தைவான் ஆளாகியுள்ளது,” என்றார் அவர்.
சுய ஆட்சி தைவானுடன் அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ உறவு இல்லை. இருப்பினும், தைவானுக்கு ஆக அதிக ஆயுதங்கள் விற்கும் நாடாக அமெரிக்கா திகழ்கிறது. தைவானின் தற்காப்புக்காக அதனிடம் ஆயுதங்களை விற்பனை செய்வதாக அமெரிக்கா கூறுகிறது.
தைவானைப் பலவந்தமாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராது என்று சீனா சொன்னதில்லை. மேலும் தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் விற்பதை அது தொடர்ந்து எதிர்த்து வருகிறது.