டாக்கா: ராட்சத தீ மூண்டு, மக்கள் நெரிசலாக வாழ்ந்து வந்த சேரிப் பகுதி ஒன்றை நாசம் செய்ததில் குறைந்தது 10,000 பேரின் வீடுகள் சேதமடைந்தன. பங்ளாதேஷின் தலைநகரான டாக்காவில் உள்ள மிர்பூர் வட்டாரத்தில் வெள்ளிக் கிழமை இரவு கொழுந்துவிட்டு எரிந்த தீ, கிட்டத்தட்ட 2,000 குடிசைகளை அழித்ததாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
பெரும்பாலான வீடுகளுக்கு பிளாஸ்டிக் கூரைகள் இருந்ததால் தீ வேகமாகப் பரவியது என்று நம்பப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் எடுத்ததாகவும் யாருக்கும் காயங்கள் இல்லை என்றும் கூறப்பட்டது.
சிலருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
சேரிவாசிகள் பெரும்பாலோர் குறைந்த வருமானம் ஈட்டும் துணித் தொழிற்சாலை ஊழியர்கள் என்று தெரிகிறது.
ஹஜ்ஜுப் பெருநாளைத் தங்களின் குடும்பங்களுடன் கொண்டாடச் சேரியிலிருந்த பலர் சென்றுவிட்டதால் தீ மூண்டபோது நிறைய குடிசைகள் காலியாக இருந்தன.
இல்லையேல் சேதம் இன்னும் பயங்கரமாக இருந்திருக்கும் என்று தலைமை போலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
நீண்ட விடுமுறையின்போது வீடுகளை இழந்த நிலையில், பலர் மூடப்பட்டிருந்த அக்கம்பக்கப் பள்ளிகளில் தற்காலிக முகாம்களை அமைத்துக்கொண்டு தஞ்சம் புகுந்தனர்.
அவர்களுக்கு உணவு, நீர், கழிவறை வசதி, மின்சார வசதி ஆகியவை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தங்குவதற்கு நிரந்தர ஏற்பாடுகள் செய்து தருவது குறித்து அதிகாரிகள் முயற்சி எடுத்து வருவதாகவும் கூறினர்.
மழைக்காலம் என்பதால் மக்கள் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் இடம்கூட சேறும் சகதியுமாக இருப்பதாகக் கூறப்பட்டது. மழையிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள சில குடும்பங்கள் நீர்புகா துணிகளைக் கொண்டு கூடாரங்கள் அமைத்துக்கொண்டன.
தீ ஏற்பட்டதற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருப்பதே டாக்காவில் அடிக்கடி தீச்சம்பவங்கள் ஏற்படக் காரணமாக உள்ளதென நிபுணர்கள் கூறுகின்றனர்.