மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது, கடந்த சனிக்கிழமை 11 கிலோ மீட்டர் தூரம் உல்லாசமாக சைக்கிளோட்டி மலேசிய மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
புத்ரா ஜெயா மற்றும் அறிவியல் நகரமான சைபர் ஜெயா வட்டாரத்தில் தமது சகாக்களுடன் அவர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
வெள்ளை, சிவப்பு நிறம் கலந்த தலைக்கவசத்தை அணிந்து சிவப்பு நிற சைக்கிளை அவர் ஓட்டிச்செல்வதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. அப்பகுதியில் காணப்பட்ட மக்கள், டாக்டர் மகாதீர் சைக்கிளோட்டுவதை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
உலகின் ஆக வயதான அரசாங்கத் தலைவரான டாக்டர் மகாதீருடன் சைக்கிள்கள், ஸ்கூட்டரில் கிட்டத்தட்ட 10 ஆடவர்கள் உடன் சென்றனர்.
“சைக்கிளோட்ட பயணம் மேற்கொள்ள வலிமை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன். உடலுக்கும் மனதிற்கும் புதுத்தெம்பு கிடைத்துள்ளது,” என்று தமது சமூக ஊடகப் பதிவில் பெருமிதத்துடன் கூறினார் 94 வயதாகும் டாக்டர் மகாதீர்.
அவருடைய இந்தப் பதிவு ஃபேஸ்புக், டுவிட்டரில் 9,000க்கும் அதிகமான ‘லைக்’குகளைப் பெற்றுள்ளது.
இந்த முதிர்ந்த வயதிலும் தமது உடல்நலத்தைப் பேணிக்காப்பதில் டாக்டர் மகாதீர் முக்கியத்துவம் காட்டுவதை இணையவாசிகள் புகழ்ந்தனர்.
“உங்களது சைக்கிளை எப்போதும் ஓட்டி, நாட்டை வேகமாக வெற்றிப் பாதைக்கு இட்டுச்செல்ல வாழ்த்துகிறேன்,” என்று இணையவாசி ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
இரண்டாவது தவணையாக மலேசிய பிரதமர் பதவி வகிக்கும் டாக்டர் மகாதீர், கடந்த மாதம்தான் தமது பிறந்தநாளைக் கொண்டாடினார். “எனது பிறந்தநாள் ஆசை மிக எளிமையானது. மலேசியாவை மீட்புப் பாதையில் கொண்டுசெல்லும் பணியை முடிக்க வேண்டும் என்பதே அது,” என்று அப்போது ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டிருந்தார்.
மலேசியாவில் தயாரிக்கப்படும் ‘புரோட்டான்’ ரக காரை ஆர்வத்துடன் ஓட்டக்கூடியவர் டாக்டர் மகாதீர்.