இந்தியாவைச் சேர்ந்த சமய போதகர் ஸாகிர் நாயக் தனது சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆயினும், தான் இனவாதி அல்ல என்று அவர் திண்ணமாகக் கூறியுள்ளார்.
தற்போது மலேசியாவின் அனைத்து மாநிலங்களிலும் பேச அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய போலிஸின் மக்கள் தொடர்புத் தலைவர் அஸ்மாவதி அகமது இந்தத் தகவலை உறுதி செய்தார். இந்தத் தடை குறித்து அனைத்து மாநில போலிஸ் தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை பொதுவெளியில் கசிந்ததைத் தொடர்ந்து அத்தகைய தடை விதிக்கப்பட்டிருப்பதை மூத்த துணை ஆணையாளர் அஸ்மாவதி உறுதி செய்தார்.
“ஆம். அப்படி ஓர் உத்தரவு அனைத்து போலிஸ் படையினருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பையும் இன நல்லிணக்கத்தையும் பேணுவதே இதன் நோக்கம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
தனது கருத்துகளை எதிராளிகள் திரித்துக்கூறி அவற்றுள் வினோதமான புரளிகளைச் சேர்த்திருப்பதாக டாக்டர் ஸாகிர் தனது மன்னிப்பு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
“நான் என் நிலைப்பாட்டை ஏற்கெனவே தெளிவுப்படுத்தியபோதும் இந்தத் தவறான புரிதலுக்காக நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதே சரி எனக் கருதுகிறேன். நீங்கள் எவரும் என்மீது வெறுப்புணர்வைக் கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை,” என்றார் அவர்.