மாஸ்கோ: கப்பலில் இருந்து ஏவப்படும் நடுத்தர ஏவுகணையை அமெரிக்கா சோதித்துப்பார்த்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்துக் கூறிய ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சுக்கான துணை அமைச்சர் செர்ஜி ரியப்கோவ், "அமெரிக்காவின் இச்செயல் வருந்தத்தக்கது.
"இதனால் ராணுவ ரீதியிலான பதற்றம் அதிகரித்துள்ளது. அதற்குப் பதிலடி தரும் வகையிலோ சினமூட்டும் வகையிலோ ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை இருக்காது," எனவும் அவர் தெரிவித்தார்.
"மண்ணில் இருந்து விண்ணுக்குப் பாயும் ஏவுகணை ஒன்றைச் சோதிக்கப்போவதாக அமெரிக்கா கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தது.
"இந்த நடுத்தர ஏவுகணை சென்ற 1987ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்டது.
"இந்த ஏவுகணைச் சோதனையை அமெரிக்கா, தனது கடற்படைக் கட்டுப்பாட்டில் உள்ள சான் நிக்கோலஸ் தீவில் மேற்கொண்டது. அமெரிக்காவின் இந்தச் செயல், அதன் ராணுவ வலிமையைப் பறைசாற்றிக்கொள்வதாக உள்ளது.
"இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு புதிய ஆபத்தான ஆயுதப் போட்டா போட்டிக்கு நாங்கள் எங்களை அனுமதியோம்.
"அமெரிக்கா உலக நாடுகளுக்கு புதுவித அணுவாயுதங்களை விற்பனை செய்யாமல் இருந்தால் நாங்களும் முன்பு போல் புதுவித அணுவாயுதங்களை உற்பத்தி செய்யவோ மற்ற உலக நாடுகளுக்கு விற்பனை செய்யவோ மாட்டோம்," என்று கூறினார்.

