நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்றபோது நாடாளுமன்ற நாயகர் டிரேவர் மலார்ட் (படம்) பெண் எம்.பி.ஒருவரின் கைக்குழந்தையை வாங்கி, தமது மடியில் வைத்துப் பாலூட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றது.
தொழிலாளர் கட்சி எம்.பி.யான டமாட்டி கோஃபி, செயற்கைக் கருவுறுதல் மூலம் பெற்ற ஆறு வார ஆண் குழந்தையுடன் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தார்.
திருவாட்டி டமாட்டியின் கணவர் டிம் ஸ்மித் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தபடி குழந்தையைப் பார்த்துக்கொண்டார். அப்போது, அவரிடம் இருந்து குழந்தையைப் பெற்றுக்கொண்ட மன்ற நாயகர் டிரேவர் மலார்ட், அதனைத் தன் மடியில் அமர்த்தி போத்தல் பாலைக் கொடுத்தார். இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது.
“பொதுவாக, நாடாளுமன்ற நாயகர் இருக்கை என்பது அவையை வழிநடத்துபவருக்கு மட்டுமே உரியது. ஆயினும், இன்று மிக முக்கியமான மனிதர் ஒருவர் என்னுடன் இருக்கையைப் பகிர்ந்துகொண்டார்,” என்று தமது டுவிட்டர் பக்கத்தில் திரு மலார்ட் பதிவிட்டிருந்தார்.
திரு மலார்ட் விவாதத்தைக் கவனித்தபடியே, அக்குழந்தையைத் தாலாட்டுவதைக் காணொளி காட்டுகிறது. ஒரு கட்டத்தில், உறுப்பினர் ஒருவர் பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டதை அவர் சுட்டிக்காட்டியபொழுது, அக்குழந்தையும் கலகலவெனக் குரல் எழுப்பியது அதை ஆமோதிப்பதுபோல இருந்தது.
சமூக ஊடகவாசிகள் பலரும் திரு மலார்டின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.
“சிறிய நாடாக இருந்தபோதிலும் நியூசிலாந்து இந்த உலகத்திற்குப் பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது,” என்று டுவிட்டர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.