ஹாங்காங்: ஹாங்காங்கில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் அதன் நிலைத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நாளேடுகளில் முழுப் பக்க விளம்பரங்களை வெளியிட்டுள்ள ஹாங்காங்கின் சில பெரிய வங்கிகள், வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
ஹாங்காங்கில் சட்டம், ஒழுங்கு நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவை வலியுறுத்தியுள்ளன.
ஹெச்எஸ்பிசி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், பேங்க் ஆஃப் ஈஸ்ட் ஏஷியா ஆகிய வங்கிகள் நேற்று முக்கிய நாளேடுகளில் விளம்பரங்களை வெளியிட்டிருந்தன.
கடந்த மாதம் ஆர்ப்பாட்டக் காரர்களை ஒரு கும்பல் தாக்கியது. இதனால் தாக்கப்பட்ட அதே சுரங்க ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டக் காரர்கள் புதன்கிழமை அன்று மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதுவரை வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. குற்றச்செயலில் ஈடுபடும் சந்தேக நபர்களை விசாரணைக்கு சீனாவுக்கு அனுப்பி வைக்க இந்த மசோதா வகை செய்கிறது.
அன்று முதல் இன்று வரை ஆர்ப்பாட்டங்கள் ஓயாமல் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே ஹாங்காங்கில் நல்லிணக்கத்தை வலியுறுத்தி வங்கிகள் முழுப் பக்க விளம்பரங்களை வெளியிட்டுள்ளன. ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் அனைத்துலக நிதி நிலையமாக ஹாங்காங் தொடர்ந்து கட்டிக்காக்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளது.
ஹெச்எஸ்பிசி வங்கி, வன் முறைக்குப் பதிலாக பேச்சு வார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.