ஹாங்காங்: ஹாங்காங்கில் இவ்வார இறுதியில் மேலும் ஆர்ப்பாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விமான நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்த விதிக்கப்பட்ட தற்காலிக நீதிமன்ற தடை உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டங்களால் ஹாங்காங் விமான நிலையத்தில் கடந்த வாரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை போல் மீண்டும் நேராமல் இருப்பதை உறுதி செய்யவே இத்தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் வரையறுக்கப்பட்ட சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில், உள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை விமான நிலைய அதிகாரிகள் வெளியேற்றும் அதிகாரத்தை ஹாங்காங் உயர்
நீதிமன்றம் கடந்த வாரம் வழங்கியது. அதை நீட்டித்து நேற்று உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது.
அனைத்துலக அளவில் ஹாங்காங்கின் நற்பெயருக்கு ஏற்பட்ட தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த தடை உத்தரவை நீட்டிப்பதாக நீதிபதி வில்சன் சான் கூறினார்.
ஹாங்காங் விமான நிலையத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு, வேண்டுமென்றோ சட்ட விரோதமாகவோ முற்படும் நபர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் தற்காலிக அதிகார உத்தரவு பெற்றதாக விமான நிலைய செயல்பாட்டு நிறுவனம் கடந்த 14ஆம் தேதி கூறியது.
அதற்கு முந்தின நாள் இரவு, முனையம் ஒன்றில் போலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதையடுத்து, இந்த தற்காலிகத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அடையாளம் காணப்படாத வகையில், சீனாவைச் சேர்ந்த இருவர் தங்களைச் சுற்றி வருவதாக கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களைத் தாக்க முற்பட்டதால் மோதல் உண்டானது.
இந்நிலையில், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக வரும் பருவத்தின் முதல் இரண்டு வார காலப் பாடங்களைப் புறக்கணிக்கப் போவதாக மாணவர் தலைவர்கள் கூறியுள்ளனர்.
சர்ச்சைக்குரிய ஒப்படைப்பு மசோதா, உலகளாவிய வாக்குரிமை, போராட்டங்களின் போது போலிஸ் முறைகேடுகள் குறித்து சுயாதீன விசாரணை ஆகியவை உள்ளிட்ட போராட்டக்காரர்களின் ஐந்து கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கவில்லை என்றால், நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, கனடா நாட்டு தூதரகம் தனது ஹாங்காங் ஊழியர்கள் பணிநிமித்தமாக சீனா செல்வதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஹாங்காங்கின் பிரிட்டிஷ் தூதரக ஊழியர் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.