ரியோ டி ஜெனிரோ: அமேசான் காட்டுத் தீயால் அனைத்துலக அளவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் இதை அவசரமாகக் கருதி ஜி7 மாநாட்டில் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் ஜெர்மனின் மெர்கல் ஏஞ்சலாவும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரூனும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பூமியின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் பற்றிய காட்டுத்தீ, தொடர்ந்து காடு முழுவதும் பரவி வருகிறது.
இதனால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது.
இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரேசில் அதிபர் ஜேய்ர் போல்சனோரோ, அமேசான் காடுகளில் தனியார் தொண்டு நிறுவனங்கள்தான் வேண்டுமென்றே தீ விபத்தை ஏற்படுத்தியுள்ளன எனத் தெரிவித்தார்.
அதிபரின் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சமூக நல ஆர்வலர்கள், அரசின் சுற்றுச்சூழல் எதிர்ப்பு கொள்கையால் அரசு ஆதரவாளர்களே அமேசான் காடுகளுக்கு தீ வைத்ததாகத் தெரிவித்தனர்.