சிட்னி: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைக் கடுமையாக எதிர்த்த பாகிஸ்தான் இந்த விவகாரத்தை ஐநா பொதுசபைக்கு கொண்டு சென்றது.
ஆனால், அங்கு பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. அனைத்துலக அளவில் பாகிஸ்தானுக்கு இது மிகப்பெரும் பின்னடைவாக இருந்தது.
இந்நிலையில், நிதி மோசடி மற்றும் தீவிரவாதிகளுக்கு நிதி அளிப்பது போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்து வரும் நிதி நடவடிக்கை அதிரடி குழுவின் ஆசியா-பசிபிக் பிரிவு நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியது.
இந்த ஆலோசனையில் பாகிஸ்தானைக் கறுப்பு பட்டியலில் வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தீவிரவாதிகளுக்கு நிதி அளிப்பதில் இருக்கும் 40 காரணிகளில் 32 காரணிகளில் பாகிஸ்தான் சிறப்பாக செயல்படவில்லை.
மேலும் இந்த நிதியை கட்டுப்படுத்துவதற்காகவும் எவ்வித நடவடிக்கையும் பாகிஸ்தான் எடுக்கவில்லை.
இதன் விளைவாக பாகிஸ்தானைக் கறுப்பு பட்டியலில் வைப்பது என முடிவெடுக்கப்பட்டு
உள்ளது.
ஏற்கெனவே, பாகிஸ்தான் கிரே பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூன் மாதம் நடந்த ஆலோசனையில் தீவிரவாதிகளுக்கு நிதி அளிப்பது தொடர்பாக அக்டோபர் மாதத்திற்குள் பதிலளிக்க வேண்டும் எனக் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஆசியா-பசிபிக் குழுவின் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் தற்போது இடம் பெற்றுள்ளது.
பாகிஸ்தானுக்கு இது மிகப்பெரும் பின்னடைவாகவும் அதன் பொருளாதாரத்தைப் பாதிக்கும் முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.