கோலாலம்பூர்: மலேசியாவின் மூத்த பத்திரிகையான தமிழ் நேசன் நாளிதழின் முன்னாள் பணியாளர்கள் இழப்பீடு கோரி அதன் வாரிய உறுப்பினர் சா.வேள்பாரி அலுவலகத்திற்குச் சென்று நேற்று மனு ஒன்றினை வழங்கினர்.
தமிழ் நேசனின் முன்னாள் பணியாளர்கள் 40 பேர் புக்கிட் டாமான்சாராவில் உள்ள இ & சி கட்டடத்தில் உள்ள வேள்பாரியின் அலுவலகத்திற்குச் சென்றனர்.
ஆனால், அங்கு வேள்பாரி இல்லாத காரணத்தினால் அவரின் செயலாளரிடம் மனுவைக் கொடுத்தனர்.
நிதிப் பிரச்சினையால் தமிழ்
நேசன் தனது வெளியீட்டைக் கடந்த ஜனவரி 31ஆம் தேதி நிறுத்திவிட்டது. ஆனால், மார்ச் மாதம் வரை சம்பளம் கொடுக்கப்படும் என ஒவ்வொருவருக்கும் கடிதம் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டது.
பிப்ரவரி மாதச் சம்பளம் வழங்கப்பட்டாலும் மார்ச் மாதச் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.
தமிழ் நேசன் நிர்வாகம் தொழிலாளர்களைச் சந்தித்து அதற்கான விளக்கத்தை அளிக்கவில்லை.
மேலும், 25லிருந்து 30 ஆண்டுகள் வரை அந்நிறுவனத்தில் வேலை செய்தோருக்குச் சட்டப்
படியான இழப்பீடும் தரப்படவில்லை.
இது சம்பந்தமாக மனிதவள அமைச்சு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இதுதொடர்பாக, நேற்று வழங்கப்பட்ட மனுவை வேள்பாரி நேரடியாக வாங்கிக்கொள்ளாததால், அடுத்த வாரமும் இது போன்ற மனு வழங்கப்படும் என்றும் நிர்வாகத்திடமிருந்து நல்ல பதில் கிடைக்கும் வரை போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.