ஆவேசமாக எரிந்த காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பாளர்கள் கடந்த சில நாட்களாகத் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
வரண்ட பருவநிலையால் சென்ற வெள்ளிக்கிழமையிலிருந்து 16 ஹெக்டர் பரப்பளவிலான ஜோகூர் இஸ்கண்டர் புத்திரி மாவட்டத்தில் உள்ள 'கம்போங் பேகாஜாங்' காட்டில் தீப் பிடித்து எரிந்துகொண்டிருக்கிறது.
அந்த நிலைமையை மோசமடைய செய்த வேகமான காற்று, அத்தீயை 98 ஹெக்டர் அளவுக்குப் பரவச்செய்தது.
இந்தப் பயங்கரத் தீயை அணைக்கும் பணியில் சுமார் 80 தீயணைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் இதுவரை அவர்கள் தீ பரவியுள்ள காட்டுப் பகுதிகளில் 45 விழுக்காட்டைக் கட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இத்தீயை நான்கு நாட்களில் முழுமையாக அணைத்துவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. காட்டில் தீப்பிடித்த இடங்களை அணைக்கும் முயற்சியில், நீர்க்குழாய்களிலிருந்து தண்ணீரைக் காட்டுக்குள் எடுத்துச்செல்வதற்கு 20,000 லிட்டர் தொட்டிகள் கொண்ட ஐந்து தண்ணீர் டாங்கர்கள் பயன்படுத்தப்பட்டன. இவை தவிர, தீயை அணைப்பதற்கு செயற்கை மழை பரிந்துரைக்கப்பட்டுள்ளதென ஜோகூர் தீ மீட்புத் துறை இயக்குநர் திரு யஹாயா மாடிஸ் குறிப்பிட்டார்.

