ஜகார்த்தா: அண்மையில் மேற்கு ஜாவாவில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தின்போது போலிஸ் அதிகாரி ஒருவருக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தவறுதலாக தீவைத்தனர்.
மிக மோசமான தீக்காயங்கள் காரணமாக இரண்டாம் இன்ஸ்பெக்டரான எர்வின் யுதா வில்டானி சிகிச்சை பலனில்லாமல் நேற்று அதிகாலை மாண்டார்.
திரு எர்வினுடன் சேர்ந்து மேலும் மூன்று போலிஸ் அதிகாரிகளுக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டன.
கடந்த 15ஆம் தேதியன்று சியான்னுர் நகரில் பல்கலைக்
கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது இந்த விபரீதம் ஏற்பட்டது.
நகரமன்றத்தின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று முழக்கமிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைக்கு போலிஸ் அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.
இதனை அடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் பெட்ரோலைத் தெளித்ததாகவும் தவறுதலாக போலிஸ் அதிகாரிகளுக்குத் தீவைத்ததாகவும் கூறப்படுகிறது.
திரு எர்வினின் உடலில் 80 விழுக்காட்டுப் பகுதி தீயில் எரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அவரை உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் போனது.
இதற்கிடையே, போலிஸ் அதிகாரிகளுக்குத் தவறுதலாக தீவைத்த மாணவர்களை இந்தோனீசிய போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த அசம்பாவிதம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணியில் இருந்தபோது நிகழ்ந்த விபரீதம் காரணமாக திரு எர்வின் மாண்டது குறித்து இந்தோனீசிய போலிஸ் படை வருத்தம் தெரிவித்தது.

