மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கும் தலைமறைவாக இருக்கும் நிதியாளரான ஜோ லோ என அழைக்கப்படும் லோ டேக் ஜோவும் 1எம்டிபி ஊழலை மூடி மறைக்க பல்வேறு வழிமுறை
களைக் கையாண்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோபால் ஸ்ரீராம் மலேசிய உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவற்றுள் ஒன்றுதான், 'அந்தப் பணம் அரபு இளவரசர் ஒருவர் அளித்த நன்கொடை' என்ற கட்டுக்கதை என அவர் குறிப்பிட்டார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் மீதான 1எம்டிபி ஊழல் வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது.
தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசாங்க முதலீட்டு நிறுவனம் 1எம்டிபிக்குச் சொந்தமான 2.3 பில்லியன் மலேசிய ரிங்கிட் பணத்தைத் தன்வயப்படுத்திக்கொண்டதாக நான்கு குற்றச்சாட்டுகளையும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது தொடர்பில் 21 குற்றச்சாட்டுகளையும் திரு நஜிப் எதிர்நோக்குகிறார்.
நீதிபதி கோலின் லாரன்ஸ் சிகுவேரா முன்னிலையில் நேற்றுக் காலை 9.30 மணிக்குத் தொடங்கிய இந்த விசாரணை பிற்பகல் 1.45 மணி வரை நடந்தது.
திரு நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு நான்கு கட்டங்களாக பில்லியன்கணக்கான அமெரிக்க டாலர் பணம் மாற்றி
விடப்பட்டதாகவும் திரு கோபால் ஸ்ரீராம் நீதிமன்றத்தில் தெரிவித் தார்.
முதல் நாளான நேற்று திரு நஜிப்பின் முன்னாள் உதவியாளர் நூரைனா ஹிராவானி முகம்மது நூர், நாடாளுமன்ற விவகாரப் பிரிவின் நிர்வாக அதிகாரி ஃபாரா நூர்தியானா அஸார் உள்ளிட்ட நால்வர் சாட்சியமளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவையின் தலைவராகவும் இருந்த திரு நஜிப்புக்கு 2015 ஜனவரி முதல் 2018 மார்ச் வரை மாதந்தோறும் கிட்டத்தட்ட 20,000 ரிங்கிட் படித்தொகை
யாக வழங்கப்பட்டது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் நஜிப்புக்கு 20 ஆண்டுகள் வரை சிறையும் ஊழல் செய்த தொகையைப் போன்று ஐந்து மடங்கு தொகை அல்லது பத்தாயிரம் ரிங்கிட், இவற்றுள் எது அதிகமோ, அத்தொகை அபராதமும் விதிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
வழக்கு விசாரணை இன்று தொடர்ந்து நடைபெறும்.

