ரியாவின் தலைநகர் பெக்கன்பாருவிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கெமாக் கிராமத்தில், அணையாமல் பற்றி எரியும் நெருப்பை அணைக்க தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தனியொரு தீயணைப்பு ஹெலிகாப்டர் முயற்சி செய்து வருகிறது.
வியட்னாம் போரின்போது அமெரிக்கா பயன்படுத்திய ஹுவே ஹெலிகாப்டர் வகையைச் சேர்ந்த பெல் 214 ஹெலிகாப்டரின் விமானி, நிலோ ஆற்றிலிருந்து ஒவ்வொரு முறையும் 600 லிட்டர் தண்ணீரை எடுத்துச்சென்று நெருப்பின்மீது கொட்டுவதை ஒரு நிமிடக் காணொளி காட்டுகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு சுமத்ராவிலும் கலிமந்தானிலும் இரண்டு மில்லியன் ஹெக்டருக்கு மேலான நிலப்பரப்பு தீக்கிரையானதைத் தொடர்ந்து, இப்போது முதல்முறையாக மீண்டும் வறட்சியினால் பெருமளவு தீ மூண்டிருக்கிறது. இந்தியப் பெருங்கடலின் எல் நினோ சூடேற்றத்தின் காரணமாக, மூன்று வாரங்களாகக் குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்யவில்லை.
ரியாவ் நகரில் இவ்வாண்டு இதுவரை 1,281 வெப்பமான பகுதிகள் துணைக்கோளத்தின் துணையுடன் கண்டறியப்பட்டன. வெப்பமான பகுதிகள் என்பது தீப்பற்றி எரியும் பகுதியாக இருப்பதற்கு 70 விழுக்காடு வாய்ப்பிருக்கிறது. சென்ற ஆண்டு, 1,500 வெப்பமான பகுதிகளும் 2017ல் 399 வெப்பமான பகுதிகளும் கண்டறியப்பட்டன. இவ்வாண்டு நவம்பர் வரை மழைக்காலம் திரும்பிவராது என எதிர்பார்க்கப்படுகிறது.
“தற்போதைய நிலைமை 2015ஐப் போல வறட்சியாக உள்ளது. ஆனால் நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்றார் கெமாங் அமைந்திருக்கும் பங்கலான் குராஸ் துணை மாவட்டத்தின் தலைவர் திரு ஃபிர்டாஸ் வஹிதின். அவர் அவ்வாறு கூறிய மறுநாள், நெருப்பு பற்றி செய்தி பெக்கன்பாரு ட்ரிபியூன் செய்தித்தாளில் முன்பக்கத் தலைப்புச்செய்தியாக இடம்பெற்றது.
நெருப்பைத் தடுக்கவும் அணைக்கவும் உள்ளூர் அதிகாரிகளுக்கு அதிபர் ஜோக்கோ விடோடோவின் நிர்வாகம் நெருக்குதல் அளித்து வருகிறது.
சென்ற மாதம், நெருப்பை அணைக்கத் தவறுவோரைப் பணிநீக்கம் செய்யுமாறு ராணுவ, போலிஸ் தலைவர்களுக்குத் திரு ஜோக்கோ உத்தரவிட்டார்.
2015ஆம் ஆண்டு நிகழ்ந்ததைப் போல மறுபடியும் கட்டுக்கடங்காத நெருப்பும் புகைமூட்டமும் ஏற்பட்டால் நாடு “அவமானத்திற்கு உள்ளாகும்” என்று திரு ஜோக்கோ எச்சரித்தார்.
அமெசான் வட்டாரத்தில் எரியும் நெருப்பைக் கட்டுக்குள் கொண்டுவரும்படி உலக நாடுகள் பிரேசிலுக்கு நெருக்குதல் அளித்து வருகையில் இந்தோனீசியாவில் பரந்த நிலப்பகுதிகளில் மூளும் நெருப்பைக் கட்டுப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இருந்தாலும், 2015ஆம் ஆண்டுபோலப் பெருமளவு நெருப்பும் பாதிப்பும் நேரக்கூடிய சாத்தியம் இருப்பதாகச் சுற்றுப்புற ஆர்வலர்கள் கருதுகின்றனர்.