லண்டன்: 'பிரெக்சிட்' விவகாரத்தில் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராகச் செயல்பட்டால் கட்சியிலிருந்து எம்பிக்கள் நீக்கப்படுவார்கள் என்று ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எச்சரித்துள்ளது.
நாடாளுமன்றம் கூடும் வேளை யில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் முடிவுக்கு ஏற்ப அனைத்து உறுப்பினர்கள் வாக்களிப்பதை உறுதி செய்வதற்காக தலைமை இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒப்பந்தம் இல்லா திட்டத்துக்கு எதிராக கட்சி எம்பிக்கள் வாக்களிப்பது பிரெக்சிட் பேச்சுவார்த்தையை கீழறுக்கும் செயல் என்றும் உறுப்பினர்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்சி கொறடாவையும் மற்ற உறுப்பினர்களைம் சந்தித்து பேசினார்.
அப்போது ஒப்பந்தத்துடன் அல்லது ஒப்பந்தமில்லாத பிரெக்சிட்டுக்கு பிரதமர் ஜான்சன் உறுதியளித்திருந்தார்.
அதே சமயத்தில் இன்று நாடாளுமன்றம் கூடும்போது பிரெக்சிட் விவகாரத்தில் அரசாங்கத்துக்கு வாக்களிக்க தவறினால் கட்சியிலிருந்து எம்பிக்கள் வெளியேற்றப் படுவார்கள் என்றும் தேர்தலில் கட்சியை பிரதிநிதித்து போட்டியிட முடியாது என்றும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதாக 'ஸ்கை நியூஸ்' தெரிவித்தது.
வரும் அக்டோபர் 31ஆம் தேதி ஒப்பந்தத்துடனோ ஒப்பந்தமில்லாமலோ ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியாக வேண்டும்.
"எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது. அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்து பிரெக்சிட்டை காப்பாற்றுவது அல்லது எதிராக வாக்களித்து பிரெக்சிட்டை கெடுப்பது," என்று ஆளும் கட்சித் தலைமை உறுப்பினர்களிடம் கூறியுள்ளதாக அந்த தகவல் மேலும் தெரிவித்தது.

