தமிழ்க் குடும்பத்துக்கு ஆதரவாகப் போராட்டத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலியர்கள்

தமிழ்க் குடும்பத்துக்கு ஆதரவாகப் போராட்டத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலியர்கள்

3 mins read
6a4e4783-ed05-4669-ba48-b99b83a62e28
அடைக்கலம் கோரி நடேசலிங்கம், பிரியா குடும்பத்தினர் செய்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஆஸ்திரேலியாவில் இருக்க முடியாது என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார். -

ஆஸ்திரேலியாவில் அகதிகளாக தஞ்சமடைய படகு மூலம் கடந்த மாதம் 13 பேர் முயன்றதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையிலிருந்து வந்த அந்தப் படகை ஆஸ்திரேலிய ராணுவம் மடக்கினர்.

இந்தியப் பெருங்டலில் ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான கோக்கோஸ் தீவு அருகே படகை அதிகாரிகள் வழிமறித்தனர்.

இலங்கையிலிருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு கடந்த 18 மாதங்களில் இதுவரை 13 படகுகள் ஆஸ்திரேலியா நோக்கி வந்துள்ளதாக ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் கூறினார்.

"தேர்தலில் வெற்றி பெற்றவுடன் இலங்கைக்குத்தான் நான் முதலில் பயணம் செய்தேன். இதற்கு அகதிகள் பிரச்சினைதான் காரணம். இலங்கையிலிருந்து அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் ஏற்றிக்கொண்டு வருவதைப் நிறுத்த வேண்டும்," என்று ஆஸ்திரேலிய ஊடகத்திடம் திரு டட்டன் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவின் கன்சர்வேட்டிவ் அரசாங்கம் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இந்த அரசாங்கத்தின்கீழ் குடிநுழைவுக் கொள்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

அதன்படி படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவை நோக்கி வரும் அகதிகள், கரை தொடுவதற்குள் அவர்களை வழிமறித்து, வந்த வழி திருப்பி அனுப்ப ஆஸ்திரேலிய அரசாங்கம் முடிவெடித்துள்ளது.

ஆஸ்திரேலியாவை அடையும் அகதிகள் பாப்புவா நியூ கீனீயிலும் நாவ்ரு தீவிலும் உள்ள தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுகின்றனர்.

இந்தத் தடுப்பு முகாம்கள் வசிக்க ஏற்புடைய இடங்களாக இல்லை என்று ஐநா போன்ற பல அமைப்புகள் கடுமையாகச் சாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்த இலங்கைத் தமிழ்க் குடும்பத்தை கிறிஸ்மஸ் தீவில் வைத்திருப்பதைக் கண்டித்து ஆஸ்திரேலியர்கள் பலர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் அகதிகளாக தஞ்சமடைந்த நடேசலிங்கம், பிரியா ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரில் இந்தக் குடும்பம் வசித்து வந்தது. அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக விசா காலாவதியானதை அடுத்து நடேசலிங்கம் - பிரியா குடும்பம் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டது.

மெல்பர்னில் உள்ள அகதிகள் முகாமில் அடைக்கப்பட்ட நடேசலிங்க குடும்பத்தினர் நிரந்தரக் குடியுரிமை கோரி பலமுறை விண்ணப்பித்தனர். கோரிக்கை மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், நடேசலிங்கம் குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்த கடந்த வியாழனன்று ஆஸ்திரேலிய அரசாங்கம் முடிவு செய்தது.

இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் தங்கள் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நடேசலிங்கம் குடும்பத்தினர் எவ்வளவு மன்றாடியும் ஆஸ்திரேலிய அரசு அவர்களை வலுக்கட்டாயமாக விமானம் மூலம் நாடு கடத்தியது.

நடேசலிங்கம் குடும்பத்தினர் நாடு கடத்தப்படுவதைத் தடுக்க ஆஸ்திரேலிய தமிழர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழ்க் குடும்பம் நாடு கடத்தப்படுவதற்குத் தடை விதித்தது.

ஆனால் அதற்குள்ளாக விமானம் இலங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. நீதிமன்ற உத்தரவின்பேரில் நாடு கடத்தல் ரத்து செய்யப்பட்டு நடேசலிங்கம் குடும்பத்தினர் அதே விமானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டனர். இருப்பினும், அவர்களை ஆஸ்திரேலியாவில் தங்க வைக்காமல் அகதிகளை அடைத்து வைத்திருக்கும் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைத்ததால் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இச்செயல் மனிதாபிமானமற்றது என்று எதிர்க்கட்சியினர் உட்பட ஆஸ்திரேலியர் கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதன் விளைவாக கடந்த வாரயிறுதியில் ஆஸ்திரேலியாவெங்கும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் குறித்து நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து அழுத்தங்கள் வந்தாலும் ஆஸ்திரேலிய அரசு அதன் முடிவில் உறுதியாக உள்ளது.

அடைக்கலம் கோரி நடேசலிங்கம் குடும்பத்தினர் செய்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஆஸ்திரேலியாவில் இருக்க முடியாது என்று திரு டட்டன் தெரிவித்துள்ளார்.