இரண்டு விமானங்களில் 13 ஆக்சிஜன் வாயுக் கலன்கள் முழுவதுமாக காலியானதற்கு அந்த விமானங்களின் பணியாளர்களே காரணம் என்று கெத்தே பசிஃபிக் ஏர்வேஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அந்தப் பணியாளர்கள் விமானத்தில் பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணையில் ஒத்துழைத்து வருவதாக அந்த விமான நிறுவனத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.
ஆக்சிஜன் வாயுக் கலன்கள் காலியாகி இருந்தது ஆகஸ்ட் மாதம் 17, 18 தேதிகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக கெத்தே நிறுவனம் தெரிவித்தது.
ஒவ்வொரு விமானத்திலும் அத்தகைய 22 ஆக்சிஜன் வாயுக் கலன்கள் கொண்டு செல்லப்படும். ஒரு விமானத்தில் ஐந்து கலன்களும் மற்றொன்றில் எட்டு கலன்களும் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
இவ்விரு விமானச் சேவைகளும் ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாகக் கூறப்பட்டது. விமானம் டொரோன்டோவை அடைந்தபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்தப் பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டது.
விமானப் பணியாளர்கள் அவசரகாலத்தில் பயன்படுத்தக்கூடிய அந்த ஆக்சிஜன் வாயுக் கலன்களில் உடனடியாக ஆக்சிஜன் நிரப்பப்பட்டதாகவும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டது.
ஹாங்காங்கின் அதிகாரிகள், உள்ளூர் போலிஸ் ஆகியோருடன் இணைந்து சீன விமானத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதாகக் கூறப்பட்டது.
அந்த விமான நிறுவனத்தின் விமான நிலையப் பணியாளர்கள், உணவு தயாரித்து விநியோகிப்போர், துப்புரவாளர்கள், பொறியாளர்கள் போன்றவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
விமானச் சேவைகளுக்கு இடையே ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை விமானங்களை விரிவான முறையில் சோதனை செய்ய வேண்டும் என்ற பாதுகாப்பு நடைமுறை கடுமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது.