காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பதற்றநிலை ஏற்பட்டிருக்கும் இவ்வேளையில், அணுவாயுதங்களை முதலில் பயன்படுத்துவது பாகிஸ்தானாக இருக்காது என்று அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் திங்கட்கிழமை (செப்டம்பர் 2) கூறியிருக்கிறார்.
“இரு நாடுகளிடமும் அணுவாயுதங்கள் இருக்கின்றன. பதற்றநிலை மோசமடைந்தால், உலகம் ஆபத்தான நிலைக்குச் செல்லக்கூடும்,” என்று லாகூர் நகரில் சீக்கிய சமூகத்தினரிடம் பேசுகையில் திரு கான் குறிப்பிட்டார்.
“எங்கள் தரப்பிலிருந்து எந்தவித முதல் நடவடிக்கைகளும் என்றுமே இருக்காது,” என்றார் அவர்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதாக ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, காஷ்மீரில் பதற்றநிலை நீடிக்கிறது.
காஷ்மீரில் செய்யப்பட்ட மாற்றம் அதன் மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும் என்றும், அனைவரும் அதனால் நன்மை அடைவார்கள் என்றும் இந்திய அரசாங்கம் கூறியது. ஆனால், இந்த மாற்றத்தால் காஷ்மீர் மக்கள் பலர் கொதிப்படைந்துள்ளனர். அதோடு, பாகிஸ்தானும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.