மலேசியாவில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் காவலர் தமக்கு ஊதியம் வழங்காத காரணத்திற்காக மேற்பார்வையாளர் ஒருவரை அடித்தே கொன்றதாகக் கூறப்படுகிறது.
ஜாலான் 13/2வில் அமைந்துள்ள அந்தக் குடியிருப்பில் ஊழியர்கள் பயன்படுத்தும் கழிவறை ஒன்றின் உள்ளே ரத்த வெள்ளத்தில் கிடந்த மேற்பார்வையாளரின் சடலம் போலிசாரால் மீட்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) மாலை 6.10 மணியளவில் 54 வயதான லீ போ மெங் எனும் அந்த மேற்பார்வையாளரை டான் என்று அழைக்கப்படும் பாதுகாவலர் ஒருவர் தலைக்கவசத்தைக் கொண்டு பலமுறை தாக்கியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. பாதுகாவலருக்கு ஊதியம் வழங்கப்படாததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக போலிஸ் தரப்பில் கூறப்பட்டது.
சம்பவத்தின் தொடர்பில் இரண்டு நேப்பாள பாதுகாவலர்கள், ஓர் உள்ளூர் பாதுகாவல் நிர்வாகி ஆகிய மூவர் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.