கோலாலம்பூர்: வாட்ஸ்அப்பில் வெளியாகி உள்ள ஒரே பாலின பாலியல் காணொளிப் பதிவுகளால் மலேசியள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆடவர்கள் இருவர் பாலியல் உறவு கொள்வதை அந்தக் காணொளிப் பதிவுகள் காட்டுகின்றன.
அவர்களில் ஒருவர் மலேசியாவின் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி என்று கூறப்படுகிறது. காணொளிகள் நேற்று அதிகாலை வாட்ஸ்அப் குழு ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
அந்த வாட்ஸ்அப் குழுவில் ஊடகத் துறையினர், அரசியல்வாதிகள் என 80க்கும் மேற்பட்டோரின் கைபேசி எண்கள் சேர்க்கப்பட்டிருந்தன. ‘அஸ்மினின் ஆகப் புதிய காணொளி’ என்ற தலைப்பின்கீழ் காணொளிகள் வாட்ஸ்அப் குழுவுக்கு அனுப்பப்பட்டன.
கடந்த சில மாதங்களாக செய்தியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட காணொளியின் ஒரு பகுதியாக இந்தப் புதிய காணொளிப் பதிவகள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அந்தக் காணொளியில் இருக்கும் ஆடவர்களில் ஒருவர் எனத் தம்மை அடையாளம் காட்டிக்கொண்டார் சந்துபோங் கொதுகியின் முன்னாள் கெஆடிலான் இளையர் அணித் தலைவர் ஹசிக் அப்துல்லா அப்துல் அஸிஸ். அமைச்சர் அஸ்மின் அலியுடன் தாம் பாலியல் உறவு கொண்டதை காணொளிகள் காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் 11 தேதியன்று சாபாவில் உள்ள சன்டகான் இடைத்தேர்தலின்போது அங்குள்ள ஹோட்டல் அறையில் அமைச்சர் அஸ்மின் அலியுடன் தாம் பாலியல் உறவு கொண்டதாக அவர் தெரிவித்தார்.
காணொளி எடுக்கப்பட்ட விவரம் தமக்குத் தெரியாது என்றார் அவர். காணொளியில் இருக்கும் ஆடவர் தாம் இல்லை என்றும் தமது பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயற்சி எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.