மலேசியாவின் சாபா மாநிலத்தில் ராணுவ முகாம் ஒன்றில் நடந்த நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சியின் போது தளபத்தியப் படைவீரர் ஒருவர் மற்றொரு வீரரால் சுடப்பட்டார்.
36 வயது மேஜர் முகம்மது ஸாகிர் அர்மயாவின் மரணத்தை விளைவித்த அந்தச் சம்பவம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கவனக்குறைவு ஏற்பட்டுள்ளதா என்பதை போலிசார் ஒருபக்கம் விசாரிக்க, இந்தச் சம்பவத்தை விசாரிப்பதற்காக சிறப்புக் குழு ஒன்றைத் தான் அமைக்கப்போவதாக மலேசிய ராணுவம் தெரிவித்துள்ளது.
பயிற்சியின்போது குண்டு துளையா மேல் கவசத்தை அணிந்திருந்த மேஜர் ஸாகிர், குற்றவாளியைப்போல பாவனை செய்து மற்றொரு வீரரை நோக்கிச் சுடவேண்டியிருந்தது. பதிலுக்குச் சுடவேண்டிய அந்த வீரர், கவசத்தால் பாதுகாக்கப்படாத ஓர் இடத்தில் மேஜர் ஸாகிரைத் தவறுதலாகச் சுட்டதாகக் கூறப்படுகிறது. சுடப்பட்ட அந்த ராணுவ அதிகாரிக்கு மருத்துவ உதவியாளர்கள் உடனே சிகிச்சை அளித்து பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். கோத்தா கினாபாலுவிலுள்ள குவீன் எலிசபெத் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
இன்னும் சில வாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் வீரராக இவர் சேரவேண்டி இருந்தது. உயிரிழந்த மேஜர் ஸாகிரின் குடும்பத்தாரிடம் மலேசிய மாமன்னர் தமது இரங்கலைத் தெரிவித்தார்.

