வட கொரியா செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) குறைந்தது இரு ஏவுகணைகளைக் கடலை நோக்கிப் பாய்ச்சியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்தது.
அமெரிக்காவுடன் அணுவாயுதம் தொடர்பாக செயல்பாட்டு நிலையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர முன்வந்து சில மணி நேரத்திற்குப் பிறகு ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டன. அமெரிக்கா புதிய பரிந்துரைகளை முன்வைக்காவிட்டால் வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிடும் என்றும் வட கொரியா எச்சரித்திருந்தது.
அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும்போது அமெரிக்கா சலுகைகள் கொடுக்கச் செய்வதற்காகவே வட கொரியா ஏவுகணைகளைப் பாய்ச்சி, புதிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு எச்சரித்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
தெற்கு பியொங்கான் மாவட்டத்திலிருந்து பாய்ச்சப்பட்ட வட கொரிய ஏவுகணைகள், அதன் கிழக்குக் கரைக்கு அப்பால் கடலை நோக்கிப் பாய்ந்ததாக தென் கொரிய ராணுவமும் தற்காப்பு அமைச்சும் தெரிவித்தன.
அந்தக் குறுந்தொலைவு ஏவுகணைகள் சுமார் 330 கிலோமீட்டர் தூரம் பறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், எந்த வகையான ஏவுகணை பாய்ச்சப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் ஜூன் மாதம் இரு கொரியாக்களுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் சந்தித்ததைத் தொடர்ந்து வட கொரியா எட்டாவது முறையாக ஏவுகணைகளைப் பாய்ச்சியிருக்கிறது.