கோலாலம்பூர்: 1எம்டிபி மோசடி விவகாரத்துக்கும் தமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று மலேசிய நீதிமன்றம் நம்ப வேண்டும் என்பதற்காக எந்த நிலையிலும் தமது பெயரைச் சொல்லாதிருக்க மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு ஜோ லோ என்று அழைக்கப்படும் லோ டேக் ஜோ சொல்லிக்கொடுத்ததாக உயர்நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
இதற்காக ஜோ லோ சில கேள்விகளைத் தயார் செய்து திரு நஜிப்புக்குப் பயிற்சி அளித்ததாகக் கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் ஒருவேளை இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டால் அவற்றினால் தமக்கு எவ்வித சிக்கலும் ஏற்படாதிருக்க தகுந்த பதில்களை திரு நஜிப்புக்கு ஜோ லோ சொல்லிக்கொடுத்ததாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த திரு அம்ஹாரி எஃபென்டி நசருதீன் கூறினார்.
திரு அம்ஹாரி, திரு நஜிப்பின் முன்னாள் சிறப்பு அதிகாரியாவார்.
தமக்கு எதிராக பதிவாகியுள்ள மோசடிக் குற்றச்சாட்டுகளை திரு நஜிப் மறுத்துள்ளார். அரசியல் காரணமாக தம்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.