ஜகார்த்தா: மலேசியா, சிங்கப்பூரில் நிலவும் புகைமூட்டப் பிரச்சினைக்குத் தாங்கள் காரணமல்ல என இந்தோனீசியா தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் அதனால் அந்நாட்டு மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அறுவடைக்குப்பின் எஞ்சிய தாவரப் பகுதிகளை எரிப்பதால் உண்டாகும் கரும்புகை இந்தோனீசியாவின் பெக்கான்பாரு நகரைக் கரும்புகை முழுமையாக சூழ்ந்துள்ளது. பகல்பொழுதில்கூட அங்கு வானம் கருமையாகக் காட்சியளிக்கிறது. இதையடுத்து, அங்குள்ள பள்ளிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை ( 13 செப்டம்பர்) மூடப்பட்டன.
புகைமூட்டப் பிரச்சினையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்நகரவாசிகள், மழை பொழிந்தால் மட்டுமே இப்பிரச்சினையில் இருந்து விடிவு கிட்டும் என நம்புகின்றனர். இதையடுத்து, அந்நகரவாசிகளில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர், மழை வேண்டி வெள்ளிக்கிழமை பிற்பகலில் திறந்தவெளியில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதனிடையே, பயிர்த்தொழிலில் ஈடுபட குறைந்தது 30 நிறுவனங்களுக்கு இந்தோனீசியா தடை விதித்துள்ளது. அந்த நிறுவனங்கள் பயிர்த்தொழில் செய்யும் பகுதிகளில் தீப்பற்றி எரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் நான்கு நிறுவனங்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன.
தடை விதிக்கப்பட்டுள்ள நான்கு செம்பனை எண்ணெய் நிறுவனங்கள், மலேசியக் குழுமங்களின் துணை நிறுவனங்கள் என்று இந்தோனீசிய சுற்றுப்புற அமைச்சர் சிட்டி நுர்பயா பக்கர் தெரிவித்தார்.
புகைமூட்டம் காரணமாக இந்தோனீசியா-மலேசியா இடையே அரசதந்திர ரீதியில் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது, இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவிடம் பேசக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 200 என்ற மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டும் இடங்களில் செயற்கை மழைப்பொழிவை உண்டாக்க சிலாங்கூர் அரசாங்கம் திட்டமிட்டது. ஆயினும், மோசமான வானிலை காரணமாக நேற்று அந்த முயற்சி கைவிடப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் கூறியது.
புகைமூட்டம் காரணமாக ஈப்போவில் உள்ள சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இயக்கப்படவிருந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, ஐநூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் செய்வதறியாது தவிக்க நேரிட்டது.
அதேபோல, நேற்றுக் காலை 9 மணியளவில் அங்கு தரையிறங்கவிருந்த நான்கு விமானங்கள் கோலாலம்பூருக்கும் சுபாங்கிற்கும் திருப்பிவிடப்பட்டன.