புத்ராஜெயா: தகுதி பெறுவோருக்கு மட்டும் அரசாங்க ஒப்பந்தங்கள் வழங்கப்பட வேண்டும் என்று மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது வலிறுத்தியுள்ளார்.
அரசாங்க ஒப்பந்தங்கள், உரிமங்கள் ஆகியவற்றை விற்க அனுமதி வழங்கப்படாது என்றார் அவர்.
நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கான திட்டத்தை வகுக்க மலேசிய அமைச்சரவை நேற்று சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தியது. அதில் கலந்துகொண்டு பேசிய டாக்டர் மகாதீர், அரசாங்க ஒப்பந்தங்கள் குறித்து இக்கருத்துகளைத் தெரிவித்தார்.
“வாய்ப்புகளைக் காட்டிலும் முடிவுகளுக்கே எங்களது அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கிறது. முன்பெல்லாம் பல் வாய்ப்புகளை அரசாங்கம் உருவாக்கித் தந்தது. அவை எல்லாம் வீணடிக்கப்பட்டன. உதாரணத்துக்கு, வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் தகுதி அல்லது தேவையான திறன் இல்லாதோரிடம் விற்கப்பட்டன.
“அரசாங்க ஒப்பந்தங்கள், உரிமங்கள் ஆகியவற்றை மற்றவர்
களிடம் விற்க தற்போது நாங்கள் அனுமதிப்பதில்லை. தகுதி பெறு
பவர்களுக்கு மட்டும் அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்,” என்று சிறப்புக் கூட்டத்துக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் டாக்டர் மகாதீர் தெவித்தார்.
மலேசியாவில் நிலவி வரும் பொருளாதார இடைவெளிப் பிரச்சினையை எதிர்கொள்ளும் அவசியம் ஏற்பட்டுள்ளதை அமைச்சரவை அடையாளம் கண்டுள்ளதாக
டாக்டர் மகாதீர் கூறினார்.
“நாட்டில் பொருளாதார ரீதியில் இடைவெளி இருப்பதை அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர். முதலில், மாநிலங்களிடையே பொருளாதார இடைவெளி இருக்கிறது. சில மாநிலங்கள் செல்வச்செழிப்புடன் இருக்கின்றன. மாறாக, சில மாநிலங்கள் வறுமையில் வாடுகின்றன. இந்த இடைவெளியைக் குறைக்க வேண்டும். நகர்ப்புறங்களில் வாழ்பவர்களுக்கும் கிராமங்களில் வாழ்பவர்களுக்கும் இடையே பொருளாதார இடைவெளி இருக்கிறது.
“அதேபோல நாட்டில் உள்ள பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே பொருளாதார ரீதியில் பெரும் இடைவெளி உள்ளது. ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஓராண்டுக்கு 2 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 3 மில்லியன் ரிங்கிட் வரை சம்பாதிக்கலாம். ஆனால் அவரைவிட குறைந்த பதவியில் இருக்கும் ஊழியருக்கு அதைவிட மிகக் குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது.
“இத்தகையோரின் வருமானம் உயர நாம் உதவ வேண்டும். ஆனால் சம்பளத்தை உயர்த்து
வதன் மூலம் மட்டும் உதவக்
கூடாது. அவர்களுக்குப் பயிற்சி வழங்கி, அவர்களது திறனை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்களால் தங்கள் சொந்த திறன்களை மேம்படுத்தி, கூடுதல் உற்பத்தித் திறனுடன் திகழ முடியும்,” என்று டாக்டர் மகாதீர் கூறினார். நாடு முன்னேற தொழில்நுட்பம், கைத்தொழில் கல்வியும் பயிற்சியும் மிகவும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.