பேங்காக்: தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அங்குள்ள வீடுகள், சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால் 23,000க்கும் மேற்பட்டோர் துயர் துடைப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு போதுமான உதவி செய்வதில் தாய்லாந்து அரசாங்கம் மெதுவாகச் செயல்படுவதாகக் கூறி அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக தாய்லாந்தில் கனமழை பெய்து வருகிறது. அதனால் பல மாநிலங்களில் திடீர் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
கடந்த மாதம் 29ஆம் தேதியிலிருந்து வெள்ளம் காரணமாக 32 பேர் மாண்டுவிட்டதாக தாய்லாந்தின் பேரிடர் துறை தெரிவித்துள்ளது.
வீடுகளுக்குள் புகுந்துள்ள வெள்ள நீர் வடிய மூன்று வாரங்கள் எடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.