பெட்டாலிங் ஜெயா: கடன்களை அடைப்பதற்கு நாட்டின் சில சொத்துகளை விற்க தமது அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது நேற்று தெரிவித்தார். உள்ளூர், வெளிநாடுகளில் இருக்கும் நல்ல விலைக்குப் போகும் அத்தியாவசியம் இல்லாத சொத்துகளை விற்பது ஒரு வழி என்றார் அவர்.
“அந்தச் சொத்துகளுக்கு என்ன மதிப்பிருக்கிறதோ அந்த விலைக்கு விற்கலாம். பொதுவாக, இத்தகைய சொத்துகளின் மதிப்பு பெரிதாக இருக்காது. ஆனால் ஒருசில சொத்துகளை ஒன்றாக விற்கும்போது கிடைக்கும் தொகை பெரிதாக இருக்கும்,” என்று மலேசிய வானொலி நிலையத்துக்குக் கொடுத்த பேட்டியின்போது டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.
விற்கப்பட இருக்கும் சொத்துகளின் விவரங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது அவற்றுக்கான சரியான விலையை நிர்ணயிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருப்பதால் அவற்றைப் பற்றி பேச இயலாது என்று டாக்டர் மகாதீர் கூறினார். விற்கப்பட இருக்கும் சொத்துகள் ஜோகூரின் இஸ்கந்தர் வட்டாரத்தில் உள்ளவையாக இருக்காது என்றார் அவர்.
“விற்கப்பட இருக்கும் சொத்துகள் ஜோகூரின் இஸ்கந்தர் வட்டாரத்தில் உள்ளவையாக இருக்காது என நினைக்கிறேன். ஏனென்றால் அந்தச் சொத்துகள் ஏற்கெனவே விற்கப்பட்டுவிட்டன. அவற்றுக்கான பணம் எங்களிடம் செலுத்தப்படவில்லை. அந்த நிலத்தை விற்பனை செய்தவரிடம் பணம் போய் சேர்ந்துள்ளது,” என்றார் டாக்டர் மகாதீர்.
1எம்டிபி மோசடியால் இழந்த பணத்தை மீட்க பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கம் முயன்று வருவதாக அவர் குறிப்பிட்டார். திரு நஜிப் ரசாக் தலைமையிலான தேசிய முன்னணி விட்டுச் சென்ற மிக மோசமான நிதி நிலையை தமது அரசாங்கம் எதிர்கொண்டு வருவதாக டாக்டர் மகாதீர் கூறினார். சொத்துகளை விற்பது மட்டுமின்றி கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் சேவையை ஒத்திவைத்திருப்பதாக அவர் கூறினார். மேலும் உடனடி தேவையில்லாத மற்ற திட்டங்களை தமது அரசாங்கம் ரத்து செய்ததாக அவர் தெரிவித்தார்.