மலேசியாவின் ஆளும் கூட்டணித் தலைவர் அன்வார் இப்ராகிம் அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் இன்று (செப்டம்பர் 18) புளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் இதனைக் குறிப்பிட்ட அவர், உரிய நேரத்தில் டாக்டர் மகாதீர் முகமது பிரதமர் பதவியிலிருந்து விலகுவார் என்ற புரிந்துணர்வு இருக்கிறது என்றார்.
தமக்குப் பதிலாக மலேசியப் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி அல்லது பிரதமர் மகாதீரின் மகன் திரு முக்ரிஸ் மகாதீர் ஆகியோருக்கு பிரதமர் பதவி வழங்கப்படலாம் என்பதை 72 வயதான திரு அன்வார் மறுத்தார்.
இந்தோனீசியாவின் காட்டுத்தீ காரணமாக மலேசியாவில் புகைமூட்டம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது தொடர்பான கேள்விக்கு, “நாம் சீற்றம் கொள்ளவேண்டும். இதனை ஒரு சுற்றுச்சூழல் போர் எனக் கருதுகிறேன்,” என்றார் திரு அன்வார்.
மில்லியன் கணக்கானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்நிலைக்குக் காரணமான நிறுவனங்கள் பாதிப்புக்குப் பொறுப்பேற்கும் விதத்தில் அரசாங்கங்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நியாயமான பொருளியல் பங்கீடு, ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை அரசாங்கக் கொள்கைகள் உறுதிப்படுத்த வேண்டும் என்ற திரு அன்வார், கீழறுப்புச் சட்டத்தைச் சீர்படுத்த வேண்டும் என்றார்.