ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றிருக்கும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் முஹம்மது ஜாவத் ஸாரிஃப் "மத்திய கிழக்கில் போரைத் தவிர்க்க முடியும் என்று என்னால் உறுதிபடக் கூறமுடியாது. ஆனால், போரைத் தொடங்குபவர்களே முடிப்பவர்களாக இருக்கமாட்டார்கள்," என்று கூறியுள்ளார்.
சவூதி அரேபியாவின் கோரிக்கைக்கிணங்கி கூடுதல் ராணுவத்தையும் ஆயுதங்களையும் அனுப்ப இருப்பதாக அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்டதையடுத்து திரு ஸாரிஃப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடா நாடுகளிலிருந்து வெளிநாட்டுப் படைகள் தள்ளியிருப்பது நல்லது என்றும் வெளிநாட்டுப் படைகள் இந்தப் பகுதிக்கு வலியையும் துன்பத்தையுமே தந்திருக்கின்றன என்றும் ஈரான் அதிபர் ஹசன் ருஹானி குறிப்பிட்டுள்ளார். வட்டார நாடுகள், வெளிநாடுகளை தொடர்புபடுத்தக்கூடிய அமைதி முயற்சி ஒன்றை ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இஸ்லாமிக் குடியரசு சமர்ப்பிக்கும் என்று ஈரான் அதிபர் ஹசன் ருஹானி நேற்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், சவூதி அரேபியாவின் எண்ணெய்க் கிணறுகள் மீதான கடந்த வாரத் தாக்குதல் ஈரான் எல்லைக்குள்ளிருந்து வந்ததை விசாரணை உறுதிப்படுத்தினால், அது ஒரு போர் நடவடிக்கையாகவே கருதப்படும் என்று சவூதியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அமைதியான தீர்வையே தாங்கள் நாடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
"தாக்குதலுக்குப் பயன்படுத்திய டிரோன்கள் ஈரானில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டவை," என்று சவூதி அரேபியாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான துணை அமைச்சர் அடெல் அல்-ஜுபேர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
ஈரானுடன் கூட்டு வைத்திருக்கும் ஏமனின் ஹுதி இயக்கம் தாக்குதல்களைத் தாம் நடத்தியதாகக் குறிப்பிட்டதை சவூதி அரேபியா நிராகரித்தது. தாக்குதல்களில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று ஈரான் மறுத்ததை அமெரிக்கா சாடியது.
"இது தொடர்ந்தால் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். அமைதியான முறையில் தீர்வு காணவே விரும்புகிறோம். தீர்வானது ஈரானின் முரட்டுத்தனமான கொள்கைகளின் முடிவாக இருக்கும்," என்று திரு ஜுபேர் குறிப்பிட்டார்.
அண்மைய தாக்குதலை அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் ஆராய்ந்ததில் வடக்குத் திசையிலிருந்து பல தாழப் பறக்கும் டிரோன்கள், கப்பலிலிருந்து தாக்கும் ஏவுகணைகள் போன்றவற்றால் நிகழ்த்தப்பட்ட ஒரு சிக்கலான தாக்குதல் என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், "இந்தத் தாக்குதலில் ஈரானுக்குத் தொடர்பில்லை. முழுமையற்ற விசாரணையால் இத்தகைய முடிவுக்குத்தான் வர முடியும்," என்று திரு ஸாரிஃப் குறிப்பிட்டுள்ளார்.
சவூதி அரேபியாவின் தற்-காப்-புத் திறன்-களில் உள்ள இடை-வெ-ளியை இந்-தத் தாக்-கு-தல் வெளிக்-காட்-டு-வ-தாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

