இந்தோனீசியாவின் பாப்புவா வட்டாரத்தில் நடந்த ஆர்ப்பட்டத்தில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) தெரிவித்தனர்.
நியூ கினி தீவின் மேற்குப் பாதியில் அமைந்திருக்கும் பாப்புவாவில், இனவாதத்தால் கொதிப்படைந்த மக்கள் தன்னாட்சி கோரி பல வாரங்களாக ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
திங்கட்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது போராளிகள் தீ மூட்டிய கட்டடங்களில் சிக்கிக்கொண்டவர்கள் தீயில் கருகி மாண்டனர். வமினா நகரில் ஓர் அரசாங்க அலுவலகமும் மற்ற சில கட்டடங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதில் 22 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் காப்பறைகளுக்குத் தப்பியோடினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் தொடர்பில் சுமார் 700 பேர் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.
“சிலர் எரிக்கப்பட்டனர், சிலர் வெட்டிக் கொல்லப்பட்டனர்...சிலர் தீயில் சிக்கிக் கொண்டனர்,” என்று உள்ளூர் ராணுவத் தளபதி சந்திரா டியன்ட்டோ, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“தீயிட்டுக் கொளுத்தப்பட்ட கடைகளில் சிக்கி உயிரிழந்திருக்கக் கூடியவர்களைத் தேடும் முயற்சியை நாங்கள் தொடங்கவிருக்கிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
வமினாவில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் பாப்புவா மக்களல்ல என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், மற்ற பகுதிகளிலிருந்து வந்த குடியேறிகளுக்கு எதிரான வன்செயல் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.