பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் ஆகிய பகுதிகளை உலுக்கிய நிலநடுக்கத்தில் குறைந்தது 22 பேர் உயிரிழந்ததோடு, 700 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று (செப்டம்பர் 24) பிற்பகல் 4 மணிவாக்கில் காஷ்மிரீன் மிர்பூரில் மையம் கொண்டு 5.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பல வினாடிகளுக்கு நீடித்ததாகவும் அதிர்ந்த கட்டடங்கள், வீடுகள் ஆகியவற்றிலிருந்து மக்கள் சாலைகளில் இறங்கி ஓடியதாகவும் கூறப்பட்டது.
லாகூரிலும் இஸ்லாமாபாத்திலும் சாலைகளில் பெரிய அளவிலான வெடிப்புகள் ஏற்பட்டதோடு, சுவர் சரிந்து, வீடுகள் இடிந்து விழுந்தன. மக்கள் பாதுகாப்புக்காகச் சாலைகளுக்கு ஓடிச்சென்றனர்.
அந்நகரின் இரு முக்கிய சாலைகளில் குறைந்தது 1.2 மீட்டர் ஆழமான வெடிப்புகள் காணப்பட்டன. சில வெடிப்புகளில் கார்கள் சிக்கியிருப்பதையும் பேருந்தும் லாரியும் சாலையோரமாகக் கிடப்பதையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான படங்கள் காட்டின.
மிர்புரின் புறநகரிலுள்ள சஹன்கிக்ரி கிராமத்திலிருந்த கிட்டத்தட்ட 400 வீடுகள் சேதமடைந்ததாகக் கிராமவாசிகள் தெரிவித்தனர். அதனையடுத்து, மிர்பூரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
காஷ்மீரின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விமான மற்றும் மருத்துவ ஆதரவுக் குழுக்களை ராணுவம் அனுப்பியிருப்பதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் புதுடெல்லி வரை உணரப்பட்டதாகக் கூறப்பட்டது. ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நில அதிர்வால் பீதியடைந்த மக்கள் வீடுகளிலிருந்தும் அலுவலகங்களிலிருந்தும் வெளியேறினார்கள்.
“அதிர்வு உணரப்பட்டபோதிலும் எந்தவிதச் சேதமும் ஏற்பட்டதாகத் தகவல் கிடைக்கவில்லை,” என்று இந்திய நிர்வாகத்தின்கீழ் இருக்கும் காஷ்மீரின் பேரிடர் நிர்வாகத் துறையைச் சேர்ந்த அமீர் அலி, ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.