உணவகத்தின் முதலாளி ஒருவர், சிகரெட்டு புகைத்த ஆடவரின் முகத்தில் தீயணைப்புக் கருவியைக் கொண்டு ரசாயனத்தைப் பீய்ச்சியடித்த சம்பவம் அமெரிக்காவின் உட்டாவில் நடந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) ஜான் பேர்ட் எனும் ஆடவர் அலெக்ஸ் ஜேமிசன் என்பவரின் கடைக்கு அருகில் நின்று புகை பிடித்துக்கொண்டிருந்தார்.
தமது கடையிலிருந்து 25 அடி தூரத்துக்குள்ளாக புகை பிடிக்கக்கூடாது என்று ஜான் பேர்ட் மற்றும் அங்கிருந்த மற்றொரு ஆடவருடன் அலெக்ஸ் ஜேமிசன் வாதிடுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது. ஜேமிசன் கையில் தீயணைப்புக் கருவி ஒன்றையும் வைத்திருந்தார்.
கதவு, ஜன்னல், காற்றுத் துளை போன்றவற்றிலிருந்து 25 அடி தூரத்துக்குள் புகை பிடிப்பதற்கு உட்டாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜேமிசனின் உணவகத்திலிருந்து சரியான தூரத்தில் நின்று தாம் புகைபிடிப்பதாக பேர்ட் வாதிட்டார்.
அதற்கு மறுப்புத் தெரிவித்த ஜேமிசன் பேர்டின் சிகரெட்டை அணைத்துவிடப்போவதாகச் சொன்னார்.
பேர்ட் சிகரெட்டை வாயில் வைத்து புகைக்கத் தொடங்கியதும் அவரது முகத்தில் ஜேமிசன் தீயணைப்புக் கருவியைக் கொண்டு ரசாயனத்தைப் பீய்ச்சியடித்தது காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்தக் காணொளியைத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ள பேர்ட், “இந்த நபரின் அடையாளத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். என்னைத் தாக்கிவிட்டு போலிஸ் வருவதற்குள் அங்கிருந்து அகன்றுவிட்டார்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் தொடர்பிலான தனது கருத்துகளை நேற்று (செப்டம்பர் 24) பதிவிட்ட ஜேமிசன், தமது செயல்களுக்காக மன்னிப்புக்கோரினார். ஆனால், பேர்ட் தவறான இடத்தில் நின்று புகைபிடித்ததையும் வலியுறுத்தியிருந்தார்.
சம்பவத்தன்று பேர்டுக்கு துணை மருத்துவ அதிகாரிகள் சிகிச்சை அளித்தனர். ஆயினும் ரசாயனம் முகத்தில் பீய்ச்சியடிக்கப்பட்டதால் தலைவலி, கண் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற தொல்லைகளுக்கு ஆளானதாக பேர்ட் தெரிவித்தார்.
ஜேமிசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.