உடலில் குண்டடியுடன் உயிரற்ற ஒரு யானைக்குட்டியின் உடல் மரத்தில் கட்டிவைக்கப்பட்ட சம்பவம் மலேசியாவின் தவாவ் பகுதியில் நடந்துள்ளது.
சுங்காய் உடின் ஆற்றில் காணப்பட்ட அந்தக் குட்டி யானையின் முதுகில் ஒரு பெரிய துவாரம் இருந்தது. அது துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் ஏற்பட்டது என்றும் குண்டடி பட்டுதான் யானைக்குட்டி இறந்துள்ளது என்றும் நம்பப்படுகிறது. நேற்று ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் யானையின் உடலைக் கண்டுபிடித்ததாக ‘தி ஸ்டார்’ கூறியது.
இந்த யானைக்குட்டியின் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
புகைப்படங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த சாபா வனவிலங்குப் பிரிவுத் தலைவர், ஆகஸ்டின் டூகா, இதன் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆற்றோட்டத்தில் அடித்துச் செல்லப்படாமல் இருக்க மரத்தில் யானையைக் கட்டி வைத்திருக்கலாம் என்று சிலர் ஃபேஸ்புக்கில் கூறியிருந்தனர்.
இதற்கிடையே இச்செய்தி உண்மையானதா என்பதையும் அறிய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.