2000ஆம் ஆண்டு முதல் ஜோகூர் பாருவில் போக்குவரத்து அபராதத்தைக் கட்டத் தவறிய சிங்கப்பூரர் இறுதியில் அதிகாரிகளிடம் 28,000 ரிங்கிட் (9,225 வெள்ளி) கட்ட வேண்டியிருந்தது. 60 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், முஸியம் தோக்கோ வட்டாரத்தில் அங்குள்ள போக்குவரத்து போலிசார் நடத்திய சோதனையில் பிடிபட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் தொடங்கிய இந்தச் சோதனை நடவடிக்கையின்போது போக்குவரத்து அபராதத்தைக் கட்டத் தவறிய 2,687 சிங்கப்பூரர்களும் 487 மலேசியர்களும் போலிசாரின் கையில் சிக்கியதாக பெர்னாமா நாளிதழ் தெரிவித்தது.
மலேசியாவின் வாகன நுழைவு முறை செயல்படுத்தப்பட்ட பின்னர் சிங்கப்பூரிலிருந்து ஜோகூருக்கு வருபவர், தங்கள் அபராதங்களைக் கட்டிய பிறகுதான் சிங்கப்பூருக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவர் என்று புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் செயலாக்க துறையின் துணை இயக்குநர் முகம்மது நஸ்ரி ஹுசேன் தெரிவித்தார்.

