தைவானின் வடகிழக்குப் பகுதியில் நான்ஃபேங்காவ் கடற்பாலம் இன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது மூன்று மீனவப் படகுகள் மற்றும் அதிலிருந்த ஆறு மீனவர்கள் இடிபாடுகளில் மாட்டிக்கொண்டதாகக் கூறப்பட்டது.
இச்சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் நிகழ்ந்தது. பாலம் இடிந்து விழுந்தபோது அதன் மேல் சென்றுகொண்டிருந்த ஒரு எண்ணெய் லாரி திடீரென தீப்பிடித்துக்கொண்டது. அந்த லாரியை ஓட்டியவர் தைவான் நாட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடிபாடுகளில் மாட்டிக்கொண்ட அறுவரைத் தேடி மீட்கும் முயற்சியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சிக்கிக்கொண்டவர்களில் பிலிப்பீன்ஸ் மற்றும் இந்தோனீசியாவைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
இந்த விபத்தில் குறைந்தது 12 பேர் கடுமையாகக் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
கிட்டத்தட்ட 140 மீட்டர் நீளம்கொண்ட அந்தப் பாலம் இடிந்து விழுவதைக் காட்டும் காணொளி ஒன்று, சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்தப் பாலத்தில் லாரி ஓட்டுநர் பாதி தூரத்திற்கு மேல் கடந்துவிட்ட நிலையில் பாலம் திடீரென இடிந்து விழுந்ததை அக்காணொளி காட்டியது.
1998ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்தப் பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.