ஜோதிகா முக்கிய பாத்திரமேற்று நடித்த ‘ராட்சசி’ தமிழ்த் திரைப்படம் மலேசியாவில் ஆசிரியர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.
தங்களது பள்ளிகளில் மாற்றத்தைக் கொண்டுவர விரும்பும் ஆசிரியர்களுக்கு உந்துதலை அளிக்கும் நோக்கில் இந்தத் திரைப்படம் காட்டப்பட்டதாக மலேசிய கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கல்வித்துறை சார்ந்த தகவல்களை அளிக்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை அமைச்சர் பாராட்டியுள்ளார். மலேசியாவிலும் இதுபோன்ற திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று படம் திரையிடப்பட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “ராட்சசி ஒரு திரைப்படம்தான் என்றாலும் மலேசியாவின் கல்வித் துறையில் இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துவது இயலாத காரியம் அல்ல. சம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினரின் ஒத்துழைப்புதான் முக்கியம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
50 ஆசிரியர்கள், 35 பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், 20 கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு ‘ராட்சசி’ படம் திரையிட்டுக் காட்டப்பட்டது.