கிட்டத்தட்ட 70 துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டு யானை உயிரிழந்த துயரம் அண்மையில் சாபாவில் நிகழ்ந்துள்ளது. அந்தக் கொடூரச் செயலைச் செய்தவர்களைப் பிடிக்க உதவுபவர்களுக்கு 30,000 மலேசிய ரிங்கிட் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துப்புக் கொடுப்பவர்களுக்கு சாபா வனவிலங்குத் துறை 20,000 ரிங்கிட் வழங்க இருப்பதாகத் தெரிவித்தது. ஓராங்குட்டான் அப்பீல் நிறுவனர் சூ ஷெர்வார்ட் 10,000 ரிங்கிட் வழங்க முன்வந்துள்ளார். அதனையடுத்து பரிசுத் தொகை 30,000 ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.
மாண்டுபோன யானையின் உடலில் மொத்தம் 70 துப்பாக்கிக் குண்டு காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. யானையின் தந்தங்கள் அகற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.