தீயணைப்பு வீரர் முகம்மது அடிப் முகம்மது காசிம் மற்றவர்களால் தாக்கப்பட்டதால்தான் உயிரிழந்தார் என மரண விசாரணை அறிக்கை வெளியானதை அடுத்து, தேசிய ஒற்றுமை, சமூக நல்வாழ்வுத் துறை அமைச்சரான பி.வேதமூர்த்தி (படம்) பதவி விலக வேண்டும் எனக் குரல்கள் கிளம்பின.இந்த நிலையில், "இதுவரை அவரிடம் நான் எந்தப் பிரச்சினையையும் பார்க்கவில்லை. அவர் அமைச்சரவையில் தொடர்ந்து அங்கம் வகிப்பார்," என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முகம்மது அடிப் மரண விசாரணை முடிவுகள் வெளியான பிறகு திரு வேதமூர்த்தியின் நிலை தொடர்பில் தாம் முடிவெடுக்கப் போவதாக கடந்த ஜனவரி மாதம் டாக்டர் மகாதீர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிலாங்கூரின் சுபாங் ஜெயாவில் உள்ளா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி நடந்த கலவரத்தின்போது படுகாயமடைந்த முகம்மது அடிப், 21 நாட்களுக்குப் பின் இறந்துபோனார். இரண்டு அல்லது மூன்று பேர் தாக்கியதால்தான் மரணமடைந்தார் என ஷா அலாம் மரண விசாரணை நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது.

