ஹாங்காங்: கிட்டத்தட்ட கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அவசரகாலச் சட்டத்தை ஹாங்காங் பயன்படுத்தியதே இல்லை.
ஆனால் பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிவதைத் தடுக்க அவசரகாலச் சட்டத்தை அது பயன்படுத்த இருக்கிறது.
இதற்காக நேற்று சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டதாக ஹாங்காங்கின் டிவிபி செய்தி நிறுவனம் கூறியது.
ஹாங்காங்கின் பிரசித்தி பெற்ற துறைமுகத்தில் கடலோடிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தடுக்க அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் 1922ஆம் ஆண்டில் அவசரகாலச் சட்டத்தை அமலாக்கியது.
இந்தச் சட்டம் ஆகக் கடைசியாக 1967ஆம் ஆண்டில் நிகழ்ந்த வன்முறை மிகுந்த கலவரத்தை நிறுத்தப் பயன்படுத்தப்பட்டது.
கடந்த சில மாதங்களாக ஹாங்காங்கில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதாவை எதிர்த்து தொடங்கிய ஆர்ப்பாட்டம் நாட்கள் செல்லச் செல்ல தீவிரமடைந்தது.
ஹாங்காங்கின் விவகாரங்களில் சீனா அதிகம் தலையிடுவதாகவும் ஜனநாயக உரிமை வேண்டும் என்றும் ஹாங்காங் மக்கள் குரல் எழுப்பினர். 1997ஆம் ஆண்டில் ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்தது பிரிட்டன்.
அதனைத் தொடர்ந்து, ஒரே நாடு இரண்டு ஆட்சி முறைகள் என்ற அணுகுமுறையில் ஹாங்காங்கை சீனா நிர்வாகம் செய்து வருகிறது.
முகக் கவசம் அணிந்துகொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் போலிசாரைத் தாக்குவதால் பொது இடங்களில் முகக் கவசம் அணிவதற்குத் தடை விதிக்க சீன ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் முகக் கவசம் அணிந்து போலிசாரைத் தாக்குதவால் அவர்களை அதிகாரிகளால் அடையாளம் காண முடியவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாதிட்டனர்.
இந்தத் தடை நிறைவேற்றப்பட்டால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரை எளிதில் அடையாளம் கண்டு கைது செய்ய அதிகாரிகளுக்கு வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாது, அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்கள் பிரசுரமாவதைத் தடுக்கவும், தொடர்புக் கட்டமைப்புகளை முடக்கவும், முறையான ஆவணம் இல்லாமல் வீடுகள் அல்லது கட்டடங்களுக்குள் சென்று தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்த ஹாங்காங் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுக்கவும் நெருக்கடி நிலையின்போது தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வர அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஆர்ப்பாட்டக்காரர்களை பலவந்தமான முறையில் அடக்க அதிகாரிகளுக்குச் சாதகமாக விதிமுறைகளை ஹாங்காங் போலிஸ் தளர்த்தியது.
இதன்மூலம் இக்கட்டான நிலைகளில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொள்ளும்போது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அதிகாரிகளே பொறுப்பு என்ற விதிமுறையை ஹாங்காங் போலிஸ் படை அதன் வழிகாட்டி நெறிமுறைகளிலிருந்து நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைக்கு ஹாங்காங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.