சோல்: வடகொரியா மீண்டும் ஓர் ஏவுகணையைப் பாய்ச்சியுள்ளது. அந்த ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து பாய்ச்சப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
கடலுக்கு அடியிலிருந்து அந்த ஏவுகணை கிளம்பிச் செல்லும் படத்தை வடகொரியாவின் செய்தி நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்டது.
கிழக்குக் கடலில் உள்ள வொன்சான் வரிகுடாவில் ஏவுகணை பாய்ச்சப்பட்டதாக அறியப்படுகிறது.
அணுவாயுதம் குறித்து அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையைத் தொடரப்போவதாக வடகொரியா அறிவித்த சில மணி நேரங்களிலேயே ஏவுகணை பாய்ச்சப்பட்டுள்ளது.
ஏவுகணையின் ரகம், அதன் பாய்ச்சப்பட்ட விதம் குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆனால் வடகொரியா சொல்வது உண்மையாக இருந்தால் அந்நாடு எல்லையை மீறிவிட்டதாக அமெரிக்கா சாடியுள்ளது.
ஏவுகணை பாய்ச்சப்பட்டதை அடுத்து கொரியத் தீபகற்பத்தில் பதற்றநிலை தொடர்கிறது.

