மலேசியாவின் ஆக உயரமான கட்டடம் தற்போது கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. 452 மீட்டர் உயரமுள்ள ‘எக்ஸ்சேஞ்ச் 106’ என்ற இந்தக் கட்டடம், பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்களை விஞ்சி தற்போது தென்கிழக்காசியாவின் ஆக உயரமான கட்டடமாகத் திகழ்கிறது. 4.9 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான இந்தக் கட்டடம், 106 மாடிகளைக் கொண்டுள்ளது.
கோலாலம்பூரில் அமையவிருக்கும் ‘டிஆர்எக்ஸ்’ நிதித்துறை வட்டாரத்தில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சர்ச்சைகளை எதிர்நோக்கும் 1எம்டிபி நிறுவனம் இதன் கட்டுமானத்திட்டத்தை உருவாக்கியுள்ளது.
‘துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச்’ என்பதன் சுருக்கமான ‘டிஆர்எக்ஸ்’, மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் திட்டமாக உருவானது. அவர் தற்போது ஊழல், கள்ளப்பணத்தை நல்ல பணமாக்குவது தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
திரு நஜிப் தொடங்கிய பல்வேறு திட்டங்கள் ரத்து செய்யப்பட்டபோதும் இந்தத் திட்டத்தைத் தொடர்வதற்குப் போதிய வளங்கள் இருப்பதாகத் தற்போதைய நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். 1998ஆம் ஆண்டில் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம் கட்டி முடிக்கப்பட்டபோது அது உலகின் ஆக உயரமான கட்டடமாக இருந்தது.