கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் முதன்மை முனையக் கட்டடத்தின் கூரை வழியாக நீர் வடிந்ததைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெகுவாகப் பரவியது.
மோசமான வாநிலை காரணமாக இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் (அக்டோபர் 7) பிற்பகல் 3.40 மணியளவில் நிகழ்ந்ததாக மலேசியாவின் விமான நிலையத்தை நிர்வகிக்கும் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் குறிப்பிட்டது. ஆனால், எந்த மாதிரியான வாநிலை என்று குறிப்பாக எதையும் தெரிவிக்கவில்லை.
மலேசியாவின் உள்ளூர் விமானச் சேவை வாயில்களுக்குச் செல்லும் வழியில் ‘ஃபிளையிங் எம்போரியம்’ கடைக்கு அருகில் விமான நிலையக் கூரையில் பல இடங்களில் நீர் வடிந்ததாகக் குறிப்பிட்ட அது, அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டு நிலைமையைச் சீர்செய்ததாகச் சொன்னது. சுமார் 20 நிமிடங்களில் நீர்க்கசிவு நிறுத்தப்பட்டது என்றும் ஒரு மணி நேரத்துக்குள் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்றும் அது தெரிவித்தது.