வாஷிங்டன்: சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்கர் இனத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 28 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட இந்த நிறுவனங்கள் வாஷிங்டனின் அனுமதியில்லாமல் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து பொருட்களை வாங்க முடியாது. அரசாங்க அமைப்புகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகிய இரண்டுமே கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இவை அனைத்தும் கண்காணிப்புச் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களாகும்.
சீனாவின் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதிப்பது இது முதல் முறையல்ல.
கடந்த மே மாதம் டிரம்ப் நிர்வாகம், பாதுகாப்புக்கு மிரட்டலாக விளங்குவதாகக் கூறி சீனாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாவெய்யின் பொருட்களுக்குத் தடை விதித்தது. தற்போது தடை விதிக்கப்பட்ட நிறுவனங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் வர்த்தக அமைச்சு கூறியது.