ஹாங்காங் நகரில் போலிசாரின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அங்குள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்தும் செயலியை ஆப்பிள் தனது செயலி பதிவிறக்கத் தளத்தில் அனுமதித்தது குறித்து சீனா அதிருப்தியில் உள்ளது. சீனாவில் செயல்படும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள், ஹாங்காங் மக்களின் ஜனநாயக உரிமையை ஆதரிப்பதா அல்லது சீன அரசின் உருட்டல் மிரட்டல்களுக்கு வளைந்துபோவதா என்பது குறித்த தர்மசங்கடத்தில் உள்ளன.
“ஹாங்காங் குண்டர்களுக்கு ஆப்பிள் வழிகாட்டுகிறதா?” என்ற தலைப்பில் சீன அரசு ஊடகமான பீப்பல் டெய்லி நாளிதழ், கட்டுரை ஒன்றை வெளியிட்டது. ‘ஹெச்கேமேப்.லைஃப்’ என்ற அந்தச் செயலி சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வசதி அளிப்பதாகக் குற்றம் சாட்டும் சீன அரசாங்கம், ஆப்பிள் இத்தகைய நடத்தைக்குத் துணைபுரிந்து தனது நற்பெயருக்குக் களங்கத்தைத் தேடுவதாகச் சாடியது.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் அந்தச் செயலியைத் தனது தளத்திலிருந்து அகற்றியுள்ளதாக இன்று (அக்டோபர் 9ஆம் தேதி) தெரிவித்தது. போலிசாரை மடக்குவதற்கு குற்றவாளிகள் இதைப் பயன்படுத்துவதால் இதனை அனுமதிக்கப் போவதில்லை என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. குவாட்ஸ் என்ற செய்திச் செயலியையும் ஆப்பிள் தனது தளத்திலிருந்து அகற்றியுள்ளது.